திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழா வரும் 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குவதையொட்டி, அதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாகும். வைகுண்ட ஏகாதசிக்கு முன் 10 நாட்கள் பகல் பத்து என்றும், ஏகாதசிக்கு பின் வரும் 10 நாட்கள் ராப்பத்து என்றும் அழைப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா, வரும் 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 23ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 1ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 2ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடக்கும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் திருக்காட்சி தர உள்ளதாக ரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது. ஜனவரி 8ம் தேதி திருக்கைத்தல சேவை, 9ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 11ம் தேதி தீர்த்தவாரி, 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.இந்த விழாவையொட்டி, ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பரமபதநாதர் சன்னதி முதல் ஆயிரங்கால் மண்டபம் வரை கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணியும், பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்காக மேல உத்தர வீதியில் பந்தல் அமைக்கும் பணியும் நேற்று முதல் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும்போது உட்கார வசதியாக இருக்கைகள் அமைக்கப்படுகிறது.ராப்பத்து திருநாளன்று ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். இதையொட்டி மண்டப தூண்கள் தண்ணீர் அடித்து தூய்மை செய்யும் பணியும் தீவிரமாக நடந்தது. ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள சிமென்ட் தளம் அகற்றப்பட்டு கருங்கற்களால் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிற்கு அடுத்த நாளே, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி வருவதாலும், கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு நடக்கும் விழா என்பதாலும், இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது….