வேலூர், பிப்.12: வேலூர் மீன் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை நேற்று கிடு கிடுவென உயர்ந்திருந்தது. இதனால் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்களின் வரத்து கடந்த வாரத்தை விட குறைந்துள்ளது.
இதனால் மீன்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விற்பனையும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வேலூர் மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் 3 லோடு மீன்கள் வந்தது. இந்த வாரம் வரத்து குறைந்து 2 லோடுகள் வந்துள்ளது. கடந்த வாரத்தைவிட மீன்களின் விலையும் சற்று கணிசமாக உயர்ந்துள்ளது. சுபமுகூர்த்தம் என்பதால் இன்று(நேற்று) விற்பனை மந்தமாக உள்ளது. வஞ்சிரம் கிலோ ₹1000 முதல் கிலோ ₹800 வரை விற்றது. இறால் கிலோ ₹300 முதல் ₹450 வரையும், நண்டு கிலோ ₹300 முதல் ₹350 வரையும் விற்றது. சங்கரா கிலோ ₹350 வரையும், ஷீலா கிலோ ₹500 வரையும், மத்தி ₹140, விரால் ₹600, கடல் வவ்வால் கிலோ ₹800, பாறை ₹500, சாலமன் ₹1000 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர். வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று மீன்கள் வாங்க வந்த அசைவ பிரியர்கள்.