சென்னை: வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த அதிமுக ஆட்சிக்கு தலைமை வகித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ெவளியிட்ட அறிக்கை: வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த திமுக ஆட்சிக்குத் தலைமை வகித்த எடப்பாடி பழனிச்சாமி, அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால் தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அபாண்ட பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள் இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திட உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திமுக அரசு. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 77வது பாராவில் “அரசு தவறு செய்து விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள தவறை இழைத்தது அதிமுக ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமி மற்றும் சண்முகம் போன்றோர் தெரிந்து கொள்ளலாம்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது யாருடைய ஆட்சி. அதுவும் அதிமுக ஆட்சிதான். சட்ட அமைச்சர் என்ற முறையில் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டை முறைப்படி கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் சி.வி.சண்முகத்திற்கு இருந்ததில்லை. ஆகவே வன்னியர் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அலட்சியமாகச் செயல்பட்ட இந்த இரட்டையர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து நடத்தப்பட்ட அவசர செயற்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பாமக வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எப்படி தமிழ்நாடு அரசு – குறிப்பாக திமுக தலைவர் இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட பாடுபட்டுள்ளார் என்று மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி மீது பழி போடுகிறார். இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளையும் கூட வன்னியர் சமுதாய நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப் போராட்டம் நடத்தி இந்த உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த 7 கருத்துக்களில் 6 கருத்துக்கள் சரியல்ல என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து முறையான தரவுகளுடன் பரிந்துரை பெறுவதில் நிகழ்ந்த தவறுகளும், குளறுபடிகளும், சண்முகம் போன்ற உதவாக்கரை சட்ட அமைச்சராக இருந்தவரின் அலட்சியமும் தேர்தலுக்காக வேண்டா வெறுப்பாக எடப்பாடி பழனிசாமி அளித்த இட ஒதுக்கீடுமே இந்தச் சமுதாயம் வருந்தத்தக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அதில் வன்னியர் சமுதாயம் பயன்பெறும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் வளர்ச்சியை, பட்டியலின- பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை சமூகநீதி மூலம் அழகு பார்த்தவர் கலைஞர். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்தி சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கியவர். அவர் வழியில் வந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். போராட்டம் இன்றி இட ஒதுக்கீடு கிடைக்கும். தம்பி ஸ்டாலின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். திமுக தலைவரும், முதல்வருமான அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியர் சமுதாயம் போற்றும் நல்ல முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….