வத்தலக்குண்டு, அக். 18: வத்தலக்குண்டுவில் குரங்குகள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி காந்திநகர் பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. காந்திநகர் மெயின் ரோட்டில் 4 பள்ளிகள் மற்றும் 4 மருத்துவமனைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் வலம் வருகின்றன. இவை அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளை பயமுறுத்தி வருகின்றன. அவர்கள் கொண்டு செல்லும் தின்பண்டங்களை விரட்டி சென்று பறிக்கின்றன. குரங்குகளுக்கு பயந்து மாணவர்கள் ஓடும் போது, வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்தாண்டு இதேபோன்று குரங்குகள் தொல்லை அதிகரித்தபோது, அவற்றை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர், அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர். இந்நிலையில் தற்போது குரங்குகள் தொல்லையால் இப்பகுதிமக்கள் மீண்டும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, மீண்டும் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.