Friday, May 17, 2024
Home » வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் வெற்றியை நெருங்கியது இந்தியா: அக்சர் அபார பந்துவீச்சு

வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் வெற்றியை நெருங்கியது இந்தியா: அக்சர் அபார பந்துவீச்சு

by kannappan

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா வெற்றியை நெருங்கியுள்ளது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது (55.5 ஓவர்). இதையடுத்து, 254 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் 110 ரன் (152 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), புஜாரா 102* ரன் (130 பந்து, 13 பவுண்டரி) விளாசினர். இதைத் தொடர்ந்து, 513 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்திருந்தது (12 ஓவர்). ஷான்டோ 25 ரன், ஜாகிர் ஹசன் 17 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ஓவரில் 124 ரன் சேர்த்தது. ஷான்டோ 67 ரன் (156 பந்து, 7 பவுண்டரி) எடுத்து உமேஷ் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். ஷான்டோவின் மட்டையில் பட்டு தெறித்த பந்தை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கோஹ்லி பாய்ந்து பிடிக்க, அது அவரது கையில் இருந்து நழுவி கீழே விழ இருந்த நிலையில் பன்ட் பாய்ந்து பிடித்து அசத்தினார்.அடுத்து வந்த யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19 ரன்னில் வெளியேற, ஜாகிர் ஹசன் 100 ரன் (224 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் கோஹ்லியிடம் பிடிபட்டார். முஷ்பிகுர் ரகிம் 23, நூருல் ஹசன் 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஷாகில் அல் ஹசன் 40 ரன், மெஹிதி ஹசன் மிராஸ் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் அக்சர் படேல் 27 ஓவரில் 10 மெய்டன் உள்பட 50 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ், அஷ்வின், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் மட்டுமே இருக்க, வங்கதேசத்துக்கு இன்னும் 241 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. …

You may also like

Leave a Comment

six + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi