புதுச்சேரி, பிப். 7: புதுவை லெனின் வீதியில் லாரி டிரான்ஸ்போர்ட் ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.8.25 லட்சம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, கொசப்பாளையம், லெனின் வீதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (61). பாலாஜி நகரிலுள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர் தனது மனைவி சாந்தியுடன் (57) வாடகை வீட்டின் முதல்தளத்தில் வசித்து வரும் நிலையில், 2வது மாடியில் அவரது மகன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இதனிடையே கடந்த சனிக்கிழமை வீட்டு பீரோவை திறந்து கதிரேசனும், அவரது மனைவியும் சாமி கும்பிட்டுள்ளனர். அதன்பிறகு நேற்று சாமி கும்பிடுவதற்காக பீரோவை திறந்தபோது அவற்றின் உள்அறை திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கிருந்த நகைகளை பார்த்தபோது (2 செயின், வளையல், மோதிரம்) என மொத்தம் 20 பவுன் நகைகள், வீட்டு வாடகை பணம் உள்பட ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8.25 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் கதிரேசன் உடனே முறையிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணா தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கடந்த சனிக்கிழமை பூஜையை முடித்தபிறகு கதிரேசன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி சாந்தி, தனது மருமகளை பார்ப்பதற்காக 2வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அரைமணி நேரம் பேசி இருந்துவிட்டு கீழே வந்தபோது கதவு வழக்கத்தைவிட சற்று சரிந்த நிலையில் அரைகுறையாக பூட்டியபடி கிடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தாத சாந்தி, வழக்கம்போல் இருந்துள்ளார். ஆனால் நேற்று மீண்டும் பூஜைபோட பீரோ கதவை திறந்தபோதுதான் நகை, பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.சம்பவம் நடந்த தினத்தில், வீட்டு கதவை சாந்தி பூட்டாமல் இருந்ததோடு, பீரோவில் சாவி அப்படியே இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடன் கைவரிசை காட்டியிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். கதிரேசன் குடும்பத்துக்கு அறிமுகமானவர்கள் அல்லது அக்கம்பக்கத்தினர் சிலர் மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்துள்ள நிலையில் அதன்பேரில் சிலரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.