சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியின் போது நெஞ்சுவலியால் துடித்த நபருக்கு முதல் உதவிசிகிச்சை அளித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த பெண் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த பெண் இன்ஸ்பெக்டர், உயிருக்கு போராடிய நபருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையியில் சிசிச்சைக்காக அனுமதித்தார். உரிய நேரத்தில் முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நபர் உயிர் பிழைத்துள்ளதாக டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் பட்டினப்பாக்கம் போலீசார் பாதிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், மெரினா பகுதியை சேர்ந்த முரளி (48) என தெரியவந்தது. உயிருக்கு போராடிய நபரை உரிய நேரத்தில் காப்பற்றிய பெண் இன்ஸ்பெக்டரை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்….