தேன்கனிக்கோட்டை, ஏப்.5: தேன்கனிக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.74 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் பகுதியில், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும்படை அதிகாரி இலக்கியா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டபோது, அஞ்செட்டி அருகே சீங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் டி.சரட், சாரீஸ், பேண்ட், நைட் பேண்ட் உள்ளிட்ட புத்தாடைகள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், யுகாதி பண்டிகையையொட்டி விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.74 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகளை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றினர். பின்னர், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உதவித் தேர்தல் அலுவலர் குமரனிடம் ஒப்படைத்தனர்.