ராயக்கோட்டை, ஏப்.5: 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்து, கெலமங்கலம் இருளர் காலனி மக்களிடையே கூடுதல் கலெக்டர் பிரசாரம் செய்தார். கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஐக்கேரி ஊராட்சி விருப்பாச்சி நகரில் உள்ள இருளர் காலனி மக்களிடையே, 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்து, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய, காய்கறிகள் மற்றும் மலர்களால் ஓவியங்கள் வரையப்பட்டன.
இருளர் காலனியில் வசிக்கும் பெண்களுக்கு, மருதாணி மூலம் கைகளில் வண்ணமிட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அலுவலக பணியாளர்களுக்கு தேர்தல் தொடர்பான குறிப்பேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிடிஓ.,க்கள் சீனிவாசமூர்த்தி, சாந்தி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.