பாணாவரம் : ரயில் கழிவறையில் பதுக்கி வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நேற்று காலை நின்றது. அப்போது கழிவறைக்கு சென்ற சிலர், கழிவறையில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை கண்டனர்.அதேபோல் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் கழிவறை, இருக்கைக்கு அடியில் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை பயணிகள் கண்டனர். இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திச்செல்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கழிவறைகளில் அரிசி மூட்டைகளை பதுக்கி கடத்துவதால் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் பெண்கள், முதியோர், குழந்தைகள் என பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிரமம் இன்றி ரயில் பயணிகள் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….