ஆலந்தூர், பிப்.5:பரங்கிமலை ரயில்வே சுரங்கபாதை அருகே உள்ள சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரங்கிமலை ரயில்வே சுரங்கபாதையின் இருபுறமும் இலகுரக வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருபுற சர்வீஸ் சாலையினை பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்வோர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் மறுபுறம் உள்ள சர்வீஸ் சாலையினை பரங்கிமலை ரயில்நிலையம் செல்லும் பயணிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிக்குச் செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரயில்நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் பயணிகள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, பரங்கிமலை போக்குவரத்து போலீசார் இந்த சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.