குடியாத்தம், ஏப். 11: குடியாத்தம் அருகே விவசாய பாசனத்திற்காக மோர்தானா அணையில் இருந்து தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை இருப்பை கருத்தில் கொண்டு கவுண்டன்யா ஆற்றில் ஒரு வினாடிக்கு 140 கன அடி வீதம், இடதுபுற மற்றும் வலதுபுற கால்வாய்களில் தலா 70 கன அடி வீதமும் 16 நாட்களுக்கு மொத்தம் 193.54 மில்லியன் கன அடி தண்ணீரை நேற்று முதல் திறந்துவிட நீர்வளத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம், வேப்பூர், ஆலத்தூர், பசுமாத்தூர் பெரிய ஏரி, சித்தேரி, காவனூர் ஏரி, அக்ரஹாரம், பெரும்பாடி, வருத்தங்கள் மற்றும் செருவங்கி உள்ளிட்ட 11 ஏரிகள் மூலம் 875 ஏக்கர் பாசன பரப்பளவு பயன்பெறும். மேலும் மோர்தானா, கொட்டாரமடுகு , ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், மீனுர், மூங்கப்பட்டு பெரும்பாடி உள்ளிட்ட ஆகிய 15 கிராமங்களில் 49 ஆழ்துளை கிணறு மற்றும் 1867 விவசாய கிணறுகள் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.