அணைக்கட்டு, ஏப். 11: அணைக்கட்டு அருகே வேலங்காடு, வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராம ஏரியில் பொற்கொடியம்மன் ஏரி கோயிலும், அருகில் உள்ள வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் ஊர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை அன்று பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நீர், மோர் போன்றவைகளை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, இந்த 2 கோயில்களில் மதிய நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நீர், மோர், நீர் ஆதாரம் அதிகரிக்க கூடிய பழவகை ஜூஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று பொற்கொடியம்மன் ஊர் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்குவதை கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை ஆய்வு செய்தார். தொடர்ந்து தினமும் மதிய நேரத்தில் கோடைக் காலம் முடியும் வரை தவறாமல் பக்தர்களுக்கு நீர் மோர் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது கோயில் எழுத்தர் ஆறுமுகம் மற்றும் கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.