மேலூர், மார்ச் 13: மேலூர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழு உத்தரவுப்படி நேற்று மெகா லோக் அதாலத் எனும் மக்கள் சமரச தீர்வு மையம் நடைபெற்றது. மேலூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதியுமான கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துக்கிருஷ்ண முரளிதாஸ், குற்றவியல் நீதி துறை மாஜிஸ்திரேட் கோகுல கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
இதில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் மன்றம் என 3 நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல், குற்றவியல், குடும்ப வழக்குகள், விபத்து மற்றும் காசோலை, நீண்ட கால வழக்குகள் என மொத்தம் 384 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 121 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரத்து 501 வழங்கப்பட்டது. சமரச தீர்வு மையங்களின் உறுப்பினர்களான மூத்த வக்கீல் முத்துராமலிங்கம், பாண்டிசெல்வம், மண்டனம்பலம் ஆகியோர் உடனிருந்தனர்.