மேட்டுப்பாளையம், ஏப். 17: மேட்டுப்பாளையத்தில் பாஜ வேட்பாளர் எல்.முருகன் பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரித்தார். பகுதிகளில் ஒன்றிய இணை அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளருமான எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லாறு பழங்குடியின கிராமத்தில் பழங்குடியின கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பழங்குடியின மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு பொதுமக்கள் நலன் கருதி 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கி வருகிறது. இந்த பொருட்கள் உங்களுக்கு கிடைக்கிறதா. நான் இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் கல்லாறு பழங்குடியின கிராமத்தை தத்தெடுத்து மாடல் கிராமமாக மாற்றப்படும்.
எம்பி நிதி மட்டுமின்றி பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசின் நிதியும் பயன்படுத்தப்படும். வீடில்லாதவர்களுக்கு மோடி அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் கட்டித்தரப்படும். கடந்த 10 ஆண்டுகளாக தேசத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பிரதமர் மோடி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். விவசாயம், கைத்தறி நெசவு உள்ளிட்ட துறைகளின் மீது மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து மோடி பணியாற்றி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு ஏழை, எளிய மக்கள் நலனைக் காக்க இந்த அரசாங்கம் நடந்து கொண்டுள்ளது. குறிப்பாக, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீடு, அந்த வீட்டிற்கான கழிப்பிட வசதி, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, விவசாயிகளுக்கு விவசாய நிதி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது பாஜ கோவை மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் குமார், வன்னியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.