கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு கண்டித்து கோவையில் 50 ஆயிரம் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், ரூ.1200 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான காப்பர், அலுமினியம், பேப்பர், பிளாஸ்டிக், சி.ஆர். சீட், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தி சார்ந்த தொழிலகங்கள் ஏற்கனவே ஆர்டர்களை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த தொழில்நிறுவனங்கள் மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், விலை குறைக்கப்படவில்லை.இதைத்தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி டிசம்பர் 20ம் தேதி நிறுவனங்களை மூடி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழில் நிறுவனங்கள் அறிவித்தன. இதன்படி இன்று (திங்கள்) நாடு முழுவதும் உள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையில் கொடிசியா, டேக்ட், காட்மா, கொசிமா, கௌமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதனால், மாவட்டத்தில் ரூ.1200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக சுந்தராபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு, இடையர்பாளையம், நீலம்பூர் பகுதியில் உள்ள தொழிலகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.இதுகுறித்து டேக்ட் அமைப்பின் கோவை தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ‘‘மூலப்பொருட்கள் விலை 100 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சூழலில், இந்த விலையேற்றம் தொழில் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது. உற்பத்தி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது,’’ என்றார். காட்மா சங்க தலைவர் சிவக்குமார் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. கோவையில் அனைத்து தொழில் அமைப்புகளும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ரூ.1200 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்….
மூலப்பொருட்கள் விலை உயர்வு கண்டித்து கோவையில் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.1200 கோடி உற்பத்தி இழப்பு
previous post