மூணாறு, ஏப்.14: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான, மூணாறில் கோடை விடுமுறை சுற்றுலா சீசன் களைகட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா தொடர்பான தொழில்கள் செய்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு ஆண்டு தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.தமிழகம் உட்பட வெளி மாநிலங்களில் வேனல் சூடு அதிகரித்து வருகிறது. அதே நேரம் கேரளாவில் வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரிப்பதால் 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் \”எல்லோ அலர்ட்\” முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.இதில் சுற்றுலா பகுதிகளான வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டம் வெயிலில் இருந்து தப்பியது.
இந்நிலையில் மூணாறின் குளிர்ந்த காலநிலை அனுபவிக்க கேரளா மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் மூணாறுக்கு வருகை தருகின்றனர்.
மக்களவை தேர்தல் காரணமாக கடந்த தினங்களில் மூணாறில் சுற்றுலா பயணிகளின் வரவு குறைந்து காணப்பட்டது. தற்போது வார விடுமுறையில் கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான மூணாறில் இரவிகுளம் தேசிய பூங்கா, மாட்டுப்பட்டி அணைக்கட்டு, குண்டளை அணைக்கட்டு மற்றும் படகுசவாரி மையங்கள் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.