சென்னை: 40 கோடி ரூபாயை விடுதலைப்புலிகள் அமைப்புக்காக பயன்படுத்துவதற்காக எடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில் சேமிப்பு கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர் 40 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தார். அவர் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது. இதை தெரிந்து கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்தன் என்பவர் அத்தொகையை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியா அனுப்பி வைத்தனர். இந்தியா வந்த அவர், பான் கார்டு, ஆதார் அட்டை பாஸ்போர்ட் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர். ஆனால், போலி பாஸ்போர்ட் வழக்கில் லட்சுமணன், மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் சிக்கினர். வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு தங்களுக்கு சட்ட பூர்வ ஜாமீன் கோரி கென்னிஸ்டர் ஃபெர்னான்டோ, பாஸ்கரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கக் கோரியும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் ஆகியோர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர், கடந்த மார்ச் 29ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….