முத்துப்பேட்டை, ஏப். 3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிழக்கு பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுபகுதி கிராமத்தை 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பணியில் இருக்கும் ஆசிரியர்களின் தீவிர அர்ப்பணிப்பு பணிகளால் இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் படித்து பல்வேறு பாராட்டுக்களை பெற்று உள்ளனர். அதேபோல் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சிறப்புகளும் பெற்றுள்ளனர்.
அதேபோல கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக இங்குள்ள ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பல்வேறு கல்வி சார்ந்த உதவிகளையும் எதையும் எதிர்பார்க்காமல் செய்து வருகின்றனர்.அதேபோல் பள்ளி வளாகமும் ஆசிரியர்களின் முயற்சியால் தனியார் பள்ளிக்கு நிகராக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மாணவர்கள் பயன்பாடு வகையில் மெகா லிஃப்கோ அகராதி வழங்க முடிவு செய்து நேற்று பள்ளியின் தலைமையாசிரியர் சீமான் முன்னிலையில் இங்கு பணியாற்றும் ஆசிரியர் சரவணன் செலவில் மாணவர்களுக்கு தலா ரூ.750 கொண்ட ரூ.15,000 மதிப்பீட்டில் மெகா லிஃப்கோ அகராதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.