ஊத்துக்கோட்டை, மே 23: ஊத்துக்கோட்டை அருகே, ஏரியில் அளவுக்கதிகமாக மண் எடுப்பதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் 85 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து ஆறுவழிச்சாலை பணிக்காக, பொக்லைன் எந்திரம் மூலம், லாரியில் அளவுக்கதிகமாக மண் ஏற்றி செல்கிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் அளவுக்கு அதிகமாக மண் எடுக்ககூடாது என கூறி, சம்மந்தப்பட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பேரிட்டிவாக்கம் கிராம பெண்கள், நேற்று, ஏரி பகுதிக்கு சென்று அளவுக்கு அதிகமாக மண் எடுக்ககூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக ஏரியில் மண் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, கலெக்டரிடம் ஓரிரு நாட்களில் புகார் தெரிவிக்க உள்ளோம், அப்போதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பெண்கள் கூறினர். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.