முத்துப்பேட்டை, மார்ச் 22:முத்துப்பேட்டை அருகே மாமணி ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் அருகே உள்ள மாமணி ஆற்றில் மணல் எடுப்பதாக வருவாய்த்துறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் விஜயராணி சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது, அங்கு 4பேர் மூன்று மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் எடுத்தது தெரிய வந்தது இதனையடுத்து நிர்வாக அலுவலர் விஜயராணி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அங்கு அனுமதியின்றி மூன்று மாட்டு வண்டிகளில் 4பேர் மணல் எடுத்துக் கொண்டிருந்தபோது 2பேர் சிக்கினர்.
இதில் மங்கலூர் வடக்கு பகுதியை விஸ்வலிங்கம் மகன் முனியப்பன்(43), அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் மணிவண்ணன்(26) ஆகிய 2பேரை கைது செய்த போலீசார் மணல் எடுக்க பயன்படுத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பியோடிய மங்கல் வடக்கு பகுதியை சேர்ந்த மணி, மற்றும் முருகையன் ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.