முசிறி, ஜூன் 14: முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 82 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் முசிறி குறுவட்ட பகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. வட்டாட்சியர்கள் பாத்திமா சகாயராஜ், சத்திய நாராயணன் முன்னிலை வகித்தனர். முசிறி குறுவட்டத்தில் அடங்கிய ஜெயங்கொண்டான், சுக்காம்பட்டி, தண்டலை புத்தூர், பேரூர், முசிறி, உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூர், முவேலி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நடைபெற்று கிராம கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்பட்டது.
இதில் பட்டா மாறுதல், நத்தம், கணினி திருத்தம், வீட்டு மனை பட்டா, கணினி சிட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 82 மனுக்கள் பெறப்பட்டது. 35 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 45 மனுக்கள் துறை சார்ந்த விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்நிகழ்வில் வேளாண் துறை அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள் தனபாக்கியம், தங்கவேல், கார்த்திக், சுந்தரி, வட்ட சார் ஆய்வாளர் ராம், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.