திருச்சி, ஏப்.24: முசிறி பொதுநூலகத்துறை, வாசகர் வட்டம் மற்றும் களம் அமைப்பு இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி வரும் ஏப்.29ம் தேதி நடைபெறவுள்ளது என முசிறி கிளை நூலகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முசிறி கிளை நுாலகர் தெரிவித்துள்ளதாவது, முசிறி நகரில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அழகிய நூலகம் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு பயன்படும் வகையில் இந்நுாலகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வரும் ஏப்.29 அன்று மாலை 6 மணிக்கு முசிறி பொதுநூலகம், திருச்சி வாசகர் வட்டம் மற்றும் களம் அமைப்பு இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி மற்றும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், கதை சொல்வது எப்படி என்றும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பத்து வயது முதல் பதினைந்து வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரை முசிறி தா.பேட்டை சாலையில் அமைந்துள்ள புதிய நூலகத்தில் பதிவு செய்து பயனடையலாம். குழந்தைகளுக்கு கதை சொல்லும் பயிற்சி, நாடக பயிற்சி, ஒரிகாமி பயிற்சி, பாட்டு சொல்லித்தருதல், அறிவியல் செயல்முறைகள், இயற்கை ஆர்வத்தை ஏற்படுத்துதல், பொம்மலாட்டம் என பல்வேறு பிரிவுகளில் மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.