தஞ்சாவூர், பிப். 28: தஞ்சாவூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி, 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு திருவண்ணாமலைக்கு பொது வினியோக திட்டத்திற்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து விருதுநகருக்கு 2000 டன் நெல் அரவைக்காக 42 வேகன்களில் அனுப்பி வைக்கப்பட்டது.