Friday, May 10, 2024
Home » மீனாட்சியம்மையின் பிள்ளைத் தமிழ்

மீனாட்சியம்மையின் பிள்ளைத் தமிழ்

by kannappan

குமரகுருபரர் பாண்டிய நாட்டிலேயுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பாருக்கும் அவர்தம் துணைவியார் சிவகாமியம்மையாருக்கும் முன்தவப்பயனாய்த் தோன்றியவர். குமரகுருபரர் தனது ஐந்து வயதுவரை பேசாமல் இருப்பதனைக் கண்ட பெற்றோர் மிகவும் மன வருத்தம் உற்றவர்களாய்  திருச்செந்தூர் சென்று முருகக் கடவுளை மனமுருக வேண்டி நின்றனர். அவர்களின் வேண்டு தலுக்கு இரங்கிய திருச்செந்தூர் முருகப்பெருமான் குமரகுருபரர் நாவில் தன் வேல் கொண்டு ‘ஓம்’ என்னும் பிரணவத்தை எழுதப் பேசும் ஆற்றல் வந்து பேசத்தொடங்கினார். மேலும் முருகப்பெருமான் அருளால் சைவ சித்தாந்தத்தின் சாத்திர சாரமாய் விளங்கும் ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் நூலை அப்பெருமான்மீது அருளிச்செய்தார். முருகக் கடவுள் அவர் கனவில் குமர வடிவமாய்த் தோன்றி ‘நீ குருபரனாகுக’ என்றருளியதால், அன்று முதல் ‘குமரகுருபரர்’ என்று  அழைக்கப்பட்டார். முருகக்கடவுள் ஆணைப்படி குமரகுருபரர்; வடதிசை நோக்கிச் செல்லும்போது ‘மதுரை மீனாட்சியம்மன் மீது  ‘பிள்ளைத்தமிழ்’ பாடினார். அதனை, அக்காலத்தில் மதுரையை ஆண்ட அரசரான  திருமலைநாயக்கர், அம்பிகை திருமுன் அரங்கேற்றுவித்தார். அப் பிள்ளைத்தமிழின் வருகைப்பருவத்து ஒன்பதாவது செய்யுளாகிய ‘தொடுக்குங் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே’ எனத் தொடங்கும் செய்யுளுக்குக் குமரகுருபரர் பொருளுரைத்தபொழுது மீனாட்சியம்மை, அர்ச்சகரின் பெண்போன்று தோற்றம் கொண்டு வந்து அரசர் கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தருளினார். இவ்வாறு மீனாட்சி அம்பிகையே மனம் மகிழ்ந்து நேரில் வருகை தந்து குமரகுருபரருக்கு அருள் செய்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் வருகைப்பருவப் பாடல்களை இந்நவராத்திரி நாளில் பாடி அம்மையை நம் இல்லத்திற்கும் வருகை தரச்செய்து அருள்பெறுவது சிறப்பன்றோ! எனவேதான் அதனை இங்கு கண்டு பாடி மகிழ்வோம்!!இறைவனைப் பற்றிப் பாடுகின்றபொழுது திருவடியில்  தொடங்கி தலையில் நிறைவு செய்வதே உயர்ந்ததாகும். இதனைப் ‘பாதாதி  கேசம்’ எனக் குறிப்பர். மனிதர்களைப் பாடுகின்ற பொழுது தலையில் தொடங்கிப் பாதத்தில் நிறைவு செய்வர். இதனை ‘கேசாதிபாதம்’ என்று குறிப்பர். குமரகுருபரர் மீனாட்சி அம்மையைப் பாடுவதால் பாதச்சிறப்பினை சொல்லித் தொடங்குகின்றார். மேலும் இப்பகுதி அம்மையை வருக! என்று அழைப்பதால் அம்பிகை அருகில் வந்து அருள்தர திருப்பாதமே முதன்மையாய் அமைகின்றபடியால் அம்மையின் சிலம்பணிந்த பாதத்தில் தொடங்கினார் எனப் பொருள் கொள்வதும் சிறப்புடையதே ஆகும். மீனாட்சியம்மை தன் அழகிய காலில் சிலம்பினை அணிந்திருக்கின்றாள். அச்சிலம்பானது  அருமையான ஒலியை எழுப்புகின்றது. இந்த ஒலிகள் தொடர்ந்துவர மீனாட்சியம்மை தனது  சிவந்த சிறிய அடிகளை வைத்து நடக்கின்றாள். அவ்வாறு அம்மை நடக்கும் பொழுதெல்லாம் அவளின்  செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பெற்ற அடிகளின் தழும்பானது  பூமியில் வந்திருக்கும்  தேவர் உலக மாதர்களுடைய மேகம் போன்ற கூந்தலில் அணிந்துள்ள இளம்பிறையில் பட்டது.மேலும் சிவபெருமான்  சடைமுடியில் அணிந்துள்ள இளம்பிறையிலும் அத்தழும்பு  பதிந்தது. இவ்வாறு அம்மையின் சிலம்பினின்று வெளியாகிய மெல்லிய ஒலியைக்கருதியோ அல்லது அம்மையின் தளர்கின்ற இளநடையைக் கருதியோ அம்பிகையின் பின்னால் வருகின்ற தெய்வப்பெண்களின் கூட்டத்துடன் சிறகுகளையுடைய அன்னமும் பின்தொடர்ந்து வருகின்றது. இத்தகைய சிறப்பினையுடைய அம்மையானவள் எனது மனமாகிய தாமரை மலரையும் அழகிய தமிழ்மொழி பழகும் கூடல்நகராகிய மதுரையையும்  திருக்கோயில்களாகக் கொண்டிருக்கின்றாள்.  அழகிய மலர்க்கொம்பு போன்றவளே! கற்பகக்காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே! வருக! என்று அழைத்து நிற்கின்றார் குமரகுருபரர்.இதனை,அம்புவி அரம்பையர்கள்தம்மஞ்சு துஞ் சளகத் திளம்பிறையும்எந்தைமுடி வளரிளம் பிறையுநாற மணிநூ புரத்தவிழும் மென்குரற்கோவசையும்மடநடைக் கோதொடர்ந்துன்செஞ்சிலம் பஅஞ்சிலம் போலிட அரிக்குரற்கிண்கிணிஅரற்றுசெஞ் சீறடிபெயர்த்தடியிடுந் தொறுநின் அலத்தகச்சுவடுபட்டுடிபற்று தெய்வக்குழாத்தினொடுசிறையோதி மம்பின்செலச்சிற்றிடைக் கொல்கிமணி மேகலைஇரங்கத்திருக்கோயில் எனவெனெஞ்சக்கஞ்சமுஞ் செஞ்சொல் தமிழ்க்கூடலுங்கொண்டகாமர்பூங் கொடி வருகவே!கற்பகா டவியில்கடம்பா டவிப்பொலிகயற்கணா யகி வருகவே!!என்ற அடிகள் எடுத்துரைக்கும்.இறையடியார்கள் நாள்தோறும் பரம்பொருளின் திருவடியையே சிந்தித்து இருப்பவர்களே ஆவர். இதனை. சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளேமன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே- என்று அபிராமிபட்டரும் மகிழ்ந்துரைப்பார், இவ்வாறு அடியவர் மனத்தில் கோயில் கொண்டருளும் அம்பிகை அடியவர்களுக்கு மனஉறுதியைத் தருபவள் ஆவாள். சிவபெருமானின் திரிபுர தாண்டவத்தின் போது அவரின் இடக்கால் பெருவிரல் வரைந்த கோலம் அசுவக்கோலம் என்று அழைக்கப்படும். இதிலிருந்து பிரம்மசாரிணி தோன்றினாள். இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதி பிறக்கும் என்று காசிப்புராணமும் குறிப்பிடுகின்றது. குமரகுருபரரும் மனஉறுதியைப்பெற திருவடியினையே பாடிப் பரவுகின்றார்.வாயின் கடையில் ஒழுகும் வெள்ளருவி போன்ற தந்தங்களினால், மலையை இடித்துப்  பொன்னாகிய செந்தூளை மத்தகத்தில் அணிவதைப்போல அணிந்தவர் விநாயகர்.மேலும்  ஏழு கடலையும் தனது பெரிய துதிக்கையால் முகந்து அவற்றின் நீரைக் குறைத்துப் பின் தனது மதநீரினால் நிறைத்தவர். வளைவுற்ற சந்திரனைப் போன்ற அங்குசப்படையைக் கையில் ஏந்தியவர். நட்சத்திரங்கள் நிறைந்த வானத்து உச்சியைப் போல அழகிய முத்துக்களைப் பதித்த முகபடாத்தைக் கொண்டவர். மேலும் சிறிய கண்களை உடையவர். இத்தகைய  இளைய யானையாகிய பிள்ளையாரைப் பெற்ற பெண் யானையினைப் போல் விளங்குபவர் அன்னை மீனாட்சி! இத்தகைய சிறப்புகளை உடைய அன்னையே வருக! என  வேண்டுகின்றார் குமரகுருபரர். வடம்பட்ட நின்துணைக்கொங்கைக் குடங்கொட்டுமதுரவமு துண்டுகடைவாய்வழியும்வெள்ளருவியெனநிலவுபொழி கிம்புரிமருப்பிற் பொருப்பிடித்துத்தடம்பட்ட பொற்றாது சிந்துரங்கும்பத்தலத்தணிவ தொப்பவப்பிச்சலராசி ஏழுந் தடக்கையின்முகந்துபின்தானநீ ரால்நிரப்பிமுடம்பட்ட மதியங் குசப்படைஎனக்ககனமுகடுகை தடவிஉடுமீன்முத்தம் பதித்திட்ட முகபடாம்எனவெழுமுகிற்படாம் நெற்றிசுற்றும்கடம்பட்ட சிறுகட் பெருங்கொலையமழவிளங்களிறீன்ற பிடி வருகவே!கற்பகா டவியில் கடம்பாடவிப்பொலிகயற்கணா யகி வருகவே!!மீனாட்சியம்மை  தனது கடல்போன்ற சேனைகளுடன்   மேல் ஏழு உலகங்களையும் வென்று  அண்டச்சுவர்த்தலத்தையும் தகர்த்து, திசையெங்கும் வெற்றியடைந்து வந்த நாளில், தெய்வத்தன்மையுடைய கயல்மீன் கொடிகள் திசைகள் தோறும் பறந்தன. அதனைப் போன்று எட்டுத்திக்கும் முட்டும்படி குதித்துக் கயல்மீன்கள் பாய்கின்ற, வரம்புகள் நெருங்கிய பெரிய வயலிடங்களையுடைய தமிழ் வளர்ந்த மதுரைக் காவலனான பாண்டியன் மகளே! வருக! கயற்கண் நாயகியே வருக! என வரவேற்கிறார் குமரகுருபரர்.முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல்அடிப்பலவின்முட்பொதி குடக்கனியொடுமுடவுத் தடந்தாழை முப்புடைக்கனிசிந்தமோதிநீர் உண்டிருண்டபுயல்பாய்படப்பபைத் தடம்பொழில்கள் அன்றியேழ்பொழிலையும் ஒருங்கலைத்துப்புறமூடும் அண்டச் சுவர்த்தலம் இடித்தப்புறக்கடல் மடுத்துழக்கிச்செயல்பாய்கடற்றானை செங்களங்கொள அம்மைதிக்குவிச யங்கொண்டநாள்தெய்வக் கயற்கொடிகள்திசைதிசை எடுத்தெனத்திக்கெட்டு முட்டவெடிபோய்க்கயல்பாய் குரம்பணை பெரும்பணைத்தமிழ்மதுரைகாவலன் மகள் வருகவேகற்பகா டவியில் கடம்பாடவிப்பொலிகயற்கணா யகிவருகவே!திருப்பாற்கடலில் தோன்றிய இலக்குமி தான் உறைவதற்கு உரிய இடமான வண்டினங்கள் பயிலும் தேன் நிறைந்த தாமரை மலரினைக் கொண்டார். இனிமை நிறைந்த தமிழ் மொழி என்னும் கடலின் நூலாகிய துறையில் மூழ்கும் கலைமகளும், தாமரை மலராகிய வீட்டில் புகுந்து கொண்டார். ஆனால் அங்கயற்கண்ணியாகிய மீனாட்சியோ சிவமணம் தினமும் கமழும் தொண்டர்களுடைய மனம் என்னும்  மதியாகிய மலர்பூத்த தடாகம் போன்ற அழகிய கோயிலில் குடிபுகுந்துள்ள மாணிக்கவல்லியாக விளங்குபவள். இத்தகைய சிறப்பினை உடைய அங்கயற்கண்ணி வில்லைப்பிடித்த மன்மதன் தன் மனைவியாகிய ரதியுடன் போர்புரிவதற்கு எடுத்திருக்கும் பல கரும்பு விற்களைப் போல, ஆகாயத்தை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு கரும்புகள் வளர்ந்திருக்கும் இனிய காடுகளையுடைய மதுரையில் எழுந்தருளியிருக்கின்ற தோகையுடைய சிறந்த மயில் போன்றவர்! அத்தகைய சிறப்புகளை உடைய மீனாட்சியம்மையே வருக! வருக! என அழைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. குண்டுபடு பேரகழி வயிறுளைந்தீன்றபைங்கோதையும் மதுரமொழுகும்கொழிமிழ்ப் பனுவல்துறைப்படியும் மடநடைக்கூந்தலம் பிடியும் அறுகால்வண்டுபடு முண்டக மனைக்குடிபுகச்சிவமணங்கமழ விண்டதொண்டர்மானதத் தடமலர்ப்பொற்கோயில் குடிகொண்டமாணிக்க வல்லிவில்வேள்துண்டுபடு மதிநுதல் தோகையொடும்அளவில்பலதொல்லுரு எடுத்தமர்செயுந்தொடுசிலை எனக்ககன முகடுமுட்டிப்பூந்துணர்த்தலை வணங்கிநிற்கும்கண்டுபடும கன்னல்பைங் காடுபடுகூடற்கலாபமா மயில்வருகவே!கற்பகா டவியில் கடம்பாடவிப்பொலிகயற்கணா யகி வருகவே!சிவபெருமான் தன் சடாமுடியின்மேல் கங்கையையும்  அமுதம் பொலிகின்ற பிறைநிலவினைச் சூடி இருக்கின்றார். அந்தப் பிறைநிலவின்மீது செம்பஞ்சுக்குழம்பு பூசப்பெற்ற மீனாட்சியம்மையின் அழகிய பாதமானது பட்டது. அதனால் அவர் தலையில் இருந்த பிறைநிலவானது சிவந்த நிறைமதியாகத் தோன்றியது. இவ்வாறு சிவபெருமான் மகுடத்தின்மீது தன் திருவடியின் சுவடுபடப் பதிக்கும் பச்சை நிறமுள்ள ங்கொம்பே!,மீனாட்சிஅம்மையே!நீயோ, ஒளியை வீசுகின்ற நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தில் செல்லுகின்ற, தெய்வத் தன்மையுள்ள ஐராவதம் என்னும் யானையின் முதுகில் வீற்றிருக்கும் இந்திராணிக்கு, பச்சைநிற வெண்கவரி வீசுவது போல கமுக மரங்கள் உயர்ந்திருக்கும், மணக்காற்று வீசுகின்ற  பூக்களையுடைய சிறந்த சோலைகள் சூழ்ந்த கூடலில், பாண்டியன் மகளாய் வளர்கின்ற பெருமையை உடையவள்! இத்தகைய சிறப்பினை உடைய அன்னையே வருக! கயற்கண் நாயகியே வருக! வருக! அன்புமீதூர அழைக்கின்றார் குமரகுருபரர்.(தொடரும்)முனைவர் மா. சிதம்பரம்…

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi