Tuesday, May 21, 2024
Home » மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

by kannappan

இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு, 370 மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏயும் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை  2019  அக்டோபர்  முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் ஒன்றியப் பிரதேசமாக நிறுவ வகை செய்யப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்ற நிலை உருவானது. ஆனால் பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்து அங்கு கலவரத்திலும் தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஒன்றிய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவருகிறது. இந்நிலையில், 1947ல் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாறுவதை உறுதி செய்தவர் ஷேக் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது மகன் பரூக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா ஆகியோர் காஷ்மீரின் முதல்வராக இருந்துள்ளனர். ஷேக் அப்துல்லாவின் சேவையை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் காஷ்மீர் காவல்துறையின் வீரம் மற்றும் சிறந்த சேவைக்கான பதக்கங்களில் அவரது படம் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போது அவரது படத்தை நீக்கிவிட்டு விருதுகளில் இந்திய தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சி ‘இது வரலாற்றை அழிக்கும் செயல்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது. பதக்கத்தில் இருந்து ஷேக் அப்துல்லா படத்தை நீக்கிவிட்டால் அவரது புகழ் மறையாது. தொடர்ந்து அவர் மக்களின் இதயங்களை ஆள்வார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். இதற்கு பாஜ மூத்த தலைவர் கவிந்தர் குப்தா, ‘அடிமைதனத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்’ என பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரம் ஷேக் அப்துல்லாவை மக்கள் ஷேர்-இ-காஷ்மீர் அதாவது காஷ்மீரின் சிங்கம் என்று அழைத்து வந்தனர். எனவே அதே பேரில் போலீசாருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அப்பதக்கத்துக்கு ஜம்மு காஷ்மீர் போலீஸ் பதக்கம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஷேக் அப்துல்லாவின் பிறந்தநாளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறையையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது. தங்கள் தலைவரின் பெருமையை முழுவதுமாக அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள மாநில அரசின் நடவடிக்கையை தேசிய மாநாட்டு கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் தீவிரவாத தாக்குதலால் பதட்டம் நிலவி வரும் நிலையில் மாநில அரசின் நடவடிக்கையும் தொடர் சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

nineteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi