பொன்னேரி, ஜூலை 10 : மீஞ்சூர் அருகே காட்டூரில் கொடுவா மீன் அறுவடை திருவிழா நடைபெற்றது. மீஞ்சூர் அருகே காட்டூரில் ஒன்றிய உவர்நீர் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் பழங்குடி மக்கள் நலத் திட்டத்தின்கீழ், கடலோர பழங்குடி மக்களுக்கு உவர்நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பங்களோடு, வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தும் விதத்தில் பணியாற்றி வருகிறது. இதன்படி, இயற்கை முறையில் மீன் வளர்க்க சிபா திட்டத்தின்கீழ் காட்டூர் பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடி குடும்பங்களை ஒரு குழுவாக தேர்ந்தெடுத்து, சிந்தாமணி ஈஸ்வரர் பழங்குடி குடும்பங்கள் குழு என்று பெயர் வைத்து, இவர்களை பங்காளர்களாக கொண்டு, பண்ணை அமைத்து கொடுவா மீன்களை வளர்த்து வருகின்றனர்.
இதன் வளர்ப்பு காலம் நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. இந்நிலையில், காட்டூரில் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை கொடுவா மீன் அறுவடை மற்றும் விற்பனை திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சிபா திட்டத்தின் தலைவியும் மூத்த விஞ்ஞானியுமான சாந்தி தலைமை தாங்கினார். இத்திட்டத்தின் மூத்த விஞ்ஞானி செந்தில்முருகன், காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராமன், துணை தலைவர் ரேவதி, ஊராட்சி செயலர் சந்திரபாபு, கல்வியாளர் உமாசங்கர் மற்றும் பழங்குடி கிராம நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த அறுவடை திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று, தங்களுக்கு பிடித்த கொடுவா மீன்களை அதிகளவில் வாங்கி சென்று பயனடைந்தனர்.