விகேபுரம்,ஏப்.30: விகேபுரத்தில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை உதவி மின் பொறியாளர் ஆக்னஸ்சாந்தி, தலைமையில் பணியாளர்கள் வழங்கினர். தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கும்முன்னர் தற்போதே மாநிலம் முழுவதும் அனலின் தாக்கம் உயர்ந்து காணப்படுகிறது. இதே போல் நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் வெயில் கொளுத்துவதால் பகலில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இரவிலும் வெயிலால் ஏற்பட்ட புளுக்கத்தால் மக்கள் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு விகேபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் மின் நுகர்வோர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை நுகர்வோர்களின் தாகம் தணிப்பதற்காக நீர் மோர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களிடையே மின் சிக்கனம், மின் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின் நுகர்வோர்கள் இணையவழி மூலமாக மின் கட்டணம் செலுத்தும் எளிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி மின் பொறியாளர் ஆக்னஸ்சாந்தி, தலைமையில் பணியாளர்கள் செய்தனர்.