நெல்லிக்குப்பம், ஜூலை 18: நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுந்தர்ராமன் (34). கார் ஓட்டுநர். இவர் திருவந்திபுரம் பகுதியில் உள்ள அய்யனார் என்பவருக்கு கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வரக்கால்பட்டு பகுதியில் இருந்து காராமணிக்குப்பம் – பில்லாலி சாலையின் வழியாக கடலூர் நோக்கி காரில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தார். பில்லாலி அருகே சென்று கொண்டிருந்தபோது பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்ம் மீது கார் மோதியது. விபத்து நடந்த உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் டிரான்ஸ்பார்மரின் சிமெண்ட் கட்டை உடைக்கப்பட்டு காருக்குள் குத்தியவாறு இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அளவில் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சுந்தர்ராமன் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்மாற்றி மீது கார் மோதி டிரைவர் படுகாயம்
previous post