தேனி, மே 23: கம்பத்தில் தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர் மான் கொம்பு கடத்தியதாக வனத் துறையிடம் வீட்டு உரிமையாளர் புகார் அளித்தார். தேனிமாவட்டம், கம்பம் நகர் கணபதி அக்ரஹாரம் தெருவில் குடியிருக்கும் சவுந்தராஜன்(70) என்பவர் நேற்று மாலை தேனி மாவட்ட வனத்துறை அலுவலகம் வந்து புகார் மனு அளித்தார். இம்மனுவில் கூறியிருந்ததாவது, கம்பத்தில் எனக்கு சொந்தமான வீட்டில் எல்ஐசி முருகன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த முருகன், அவர் குடியிருக்கும் வீட்டின் உள்ளிருந்து, துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்த மான்கொம்பை ஒரு துணியில் சுற்றி எடுத்துச் சென்றனர். இதனை நானும் என் மனைவியும் பார்த்தோம். சட்டத்திற்கு புறம்பாக வன உயிரினங்களின் உடமைகளை வைத்திருப்பதும், பதுக்குவதும் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் மான்கொம்பினை பதுக்கி வைத்திருந்த எல்.ஐ.சி முருகன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில்
தெரிவித்துள்ளார்.