சின்னமனூர், மே 23: சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள சங்கிலித்தேவன் குளத்தை சுற்றி நடைபாதையில் மரக்கன்றுகளை எம்எல்ஏ ராமகிருஷ்ணன் நட்டு வைத்தார். சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் மின் நகர் எதிர்புறம் சுமார் 60 ஏக்கரில் இருந்த சங்கிலித்தேவன் குளம் ஆக்கிரமிப்பில் சிக்கி தூர்வாரப்படாமல் இருந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் பாதிப்படைந்திருந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிய நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தலைமையில் சங்கிலித்தேவன் குளம் ஆய்வு செய்யப்பட்டு முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து ரூ.1.30 கோடி செலவில் குளம் தூர்வாரப்பட்டு நான்குபுறமும் கரைகள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் அளவிற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்டம் திமுக செயலாளர் கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் குழு இளங்கோ, நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு துணைத்தலைவரும், சின்னமனூர் நகர செயலாளர் முத்துக்குமார், தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பஞ்சாப் முத்துக்குமரன், நகராட்சி கமிஷனர் கணேஷ், பில்டிங் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.