மானூர், மார்ச் 15: மானூர் அருகே இளம்பெண்ணிடம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மானூர் அருகே வெங்கலப்பொட்டலைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கங்கைகொண்டான் சிப்கார்ட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரிடம் மேலதாழையூத்தை சேர்ந்த அருள்ராஜ் மகன் டிரைவர் ஆரோக்கியராஜ் (32) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி 4 கிராம் தங்க மோதிரத்தை வாங்கியுள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமான தகவல் தெரிய வரவே இளம்பெண் மீண்டும் மோதிரத்தை கேட்டுள்ளார். அப்போது அவர் தர மறுத்ததாக தெரிகிறது. இது குறித்து அவர் மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்தார்.