மண்டபம்,மார்ச் 13: மானாங்குடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மக்களை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்றார். மண்டபம் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மானாங்குடி ஊராட்சி மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். முகாமில் ஊராட்சி பகுதிகளில் உள்ள குறைகளையும், அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களாக பெற்றுக் கொண்டார்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த முகாமில் மண்டபம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், மானாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், கிராம தலைவர் சேதுபதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.