கோவை, ஏப். 27: கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 81 ஆரம்ப பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 17 மேல்நிலைப்பள்ளிகள், ஒரு சிறப்பு பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர். 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு தற்போது சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், பள்ளிகளில் அரசின் திட்டங்கள் குறித்த விளக்க படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிக்கு வரும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர். அதன்படி, மாநகராட்சி துவக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க பெற்றோரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
previous post