ஆரணி,ஏப்.24: ஆரணி அருகே மாணிவியிடம் பாலியல் சிஷ்மிஷத்தில் ஈடுபட்டதாக விவசாயி மீது போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 17வயது மகள், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அன்று அந்த மாணவி அதேபகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு ஏரி வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கண்ணமங்கலம் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த ராமன்(35), என்பவர், அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவியை வழி மறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி ராமனை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவந்து பெற்றோர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனால், அந்த மாணவியின் பெற்றோர்கள் ராமனிடம் சென்று கேட்டதற்கு அவர்களை ஆபாசமாக திட்டி தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தலைமைறைவான அவரை தேடிவருகின்றனர்.