Friday, May 17, 2024
Home » மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட சமையல் பொறுப்பாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்: மகளிர் குழுவினர் 285 பேர் பங்கேற்பு

மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட சமையல் பொறுப்பாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்: மகளிர் குழுவினர் 285 பேர் பங்கேற்பு

by Karthik Yash

பெரியபாளையம், மே 18: எல்லாபுரம் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ், சமையல் மைய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட, மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 285 பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் மற்றும் வட்டார இயக்க மேலாண்மை குழு சார்பில், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி தயாரிப்புக்காக மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 285 பெண்கள் சமையல் மைய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று முதல் பெரியபாளையத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக பயிற்சி முகாம் நடைபெற்றது.

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். எல்லாபுரம் வட்டார இயக்கக உதவி திட்ட அலுவலர் ராமதாஸ், அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், எல்லாபுரம் ஒன்றிய மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 285 பெண்கள், 98 அரசு பள்ளிகளில் மாணவர்களின் காலை சிற்றுண்டி தயாரிக்கான சமையல் மைய பொறுப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 7 கட்டங்களாக பயிற்சியளித்து, வரும் 26ம் தேதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, நேற்று பெரியபாளையத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதல்கட்ட முகாமை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மலர்விழி பங்கேற்று துவக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்றும் இன்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 285 பெண்களுக்கு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட வழிகாட்டு முறைகளை, புதிதாக தேர்வு செய்யப்பட்ட சமையல் மைய பொறுப்பாளர்களுக்கு திட்ட இயக்குநர் மலர்விழி எடுத்துரைத்தார். இம்முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்கக ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், உமாபதி உஷாராணி, வனிதா, மாலா, காஞ்சனா, ஜெயசித்ரா, சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi