ஊட்டி, அக். 20: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாாியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். கலெக்டர் அலுவலகம் அருகே துவங்கிய பேரணி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன், ஊட்டி ஆர்டிஒ மகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுதாகர், உதவி பொறியாளர் சங்கீதா, துணை நிலநீர் வல்லுநர் குருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.