கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல்- செஞ்சி சாலையை தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம், வேட்டவலம் ஆகிய பகுதிகளிலிருந்து செஞ்சிக்கு செல்வதற்கு இந்த சாலையே முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் கெங்கவரம்,கணகன்குப்பம், ஆலம்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு கனரக வாகனங்கள், கார், பேருந்துகள் முற்றிலும் இந்த சாலையிலே அதிகளவில் செல்கின்றன. மேலும் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆலம்பூண்டி தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த சாலை வழியாக செல்கின்றனர்.இந்நிலையில் மழவந்தாங்கல்- செஞ்சி சாலை இடதுபுறமாக மழவந்தாங்கல் துணை சுகாதார நிலையம் அருகில் சாலையை ஒட்டி சுமார் 50 சென்ட் பரப்பளில் வறண்ட குளம் அமைந்துள்ளது. அந்தக் குளத்தில் தற்போது தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக உள்ளது. ஆனால் இந்த குளத்தை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எதிர் வரும் வாகனங்களை கடந்து செல்லும்போது, குளத்தை கரையில் இரும்பு தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனே இப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி குளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். …