கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மருதன்தோப்பு பகுதியில் தெருக்குழாய்களில் அனைத்து நாட்களிலும் குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது மருதன்தோப்பு. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் குடிநீர் சப்ளைக்காக அரசு சார்பில் தெருக்களில் குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், குடிநீருக்காக இப்பகுதியில் உள்ள பெண்கள், சிறுவர்கள் 2 கிமீ தொலைவில் உள்ள இசிஆர் சாலையில் உள்ள கீழக்கரை துணை மின் நிலையம் அருகில் உள்ள குடிநீர் குழாய்களில் தள்ளுவண்டி, சைக்கிள் மூலம் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பூபதி கூறுகையில், ‘இங்குள்ள குடிநீர் டேங்கில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காற்றுத் தான் வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் தண்ணீர் எடுக்க செல்லும் பெண்கள் கிழக்கு கடற்கரை சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்து விட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இங்குள்ள தெரு குடிநீர் குழாய்களில் அனைத்து நாட்களிலும் குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்….