காரைக்கால், ஜூன் 4: காரைக்கால் அடுத்த எம்எஸ்பி நகரை சேர்ந்தவர் செவிலியர் சிந்தியா (29). இவர் இதற்கு முன்பு பெங்களூருவில் வேலை செய்தபோது, தன்னுடன் வேலை பார்த்த ஆண் செவிலியரான கேரளாவை சேர்ந்த ஜெரிஷ் எம்.பஷீர் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜெரிஷ் பஷீர், தற்போது காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக வேலை செய்து வருகிறார். பயிற்சிக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு ஜெரிஷ் பஷீர் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் செவிலியர் சரண்யா என்பவருடன் பழகி வந்துள்ளார். அடிக்கடி செல்போனில் சரண்யாவுடன் பேசி வந்துள்ளார். இதனை மனைவி சிந்தியா கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது செல்போனில் மீண்டும் சரண்யாவுடன் ஜெரிஷ் பஷீர் நீண்டநேரம் பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது சிந்தியாவை ஜெரிஷ் சரமாரி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிந்தியா, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெரிஷ் பஷீரை கைது செய்தனர்.