புதுக்கோட்டை,மே 7: பிளஸ்2 பொதுத்தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் 93.79 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட 2.21 சதவீம் அதிகம் பெற்றுள்ளது. மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 24வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 17,820 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8,083 பேர் ஆண்கள், 9.737 பேர் பெண்கள். மொத்தம் 16,714 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 7,355 பேர் ஆண்கள், 9,359 பேர் பெண்கள். இது 93.79 சதவிகிதமாகும். மாநில அளவிலான தேர்ச்சி விகிதப்படி, புதுக்கோட்டை மாவட்டம் 24வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் புள்ளியியல் பாடத்தைத் தேர்வு செய்திருந்த 123 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல, நுண் உயிரியல் எழுதிய 85 பேரும், பொது செவிலியர் எழுதிய 232 பேரும், உயிர் வேதியியல் எழுதிய 14 பேரும், அரசியல் அறிவியல் எழுதிய 119 பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 96.97 சதவிகிதமும், முழுமையான உதவி பெறும் பள்ளிகளில் 94.73 சதவிகிதமும், அரசுப் பள்ளிகளில் 91.80 சதவிகிதமும், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 98.14 சதவிகிதமும், சுயநிதிப் பள்ளிகளில் 96.68 சதவிகிதமும், சுயநிதி (மெட்ரிக்) பள்ளிகளில் 99.14 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் 93.79 சதவிகிதம் எடுத்து, 24வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகள் அளவில் 91.83 சதவிகிதம் எடுத்து, மாநிலத்தில் 18வது
இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் 91.58 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது, 93.79 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுகடந்த ஆண்டைவிட 2.21 சதவீம் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.