மதுரை, அக். 2: மதுரை, கோ.புதூரில் உள்ள புனித லூர்தன்னை திருத்தலத்தில் ஆலயத்திற்கு பங்கானவர்கள் பொங்கல் வைத்து நன்றிக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் செய்த நன்மைக் காகவும், அரும்பெரும் செயல்களுக்காகவும் நன்றியறிதல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் முதல் நாளாக திருச்சி சலேசிய சபையின் மாநில தலைவர் அருட்தந்தை அகிலன் தலைமை ஏற்று நன்றி விழாவினை கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.
லூர்தன்னை திருத்தலத்தின் நன்றியறிதல் விழாவின் ஒரு பகுதியாக பொங்கல் விழா நேற்று நடந்தது. பங்கு தந்தை ஜார்ஜ் தலைமை வகித்தார். உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், யூஜின் மற்றும் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் ஆலயத்தின் அனைத்து குடும்ப பக்தர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தங்களது நன்றி கடனை லூர்தன்னைக்கு செலுத்தினர். அதன் பிறகு நடந்த கூட்டுத்திருப்பலியில் ‘அருள்மிக பெற்றவரே வாழ்க’ என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்பட்டது. நன்றி விழாவின் நிறைவாக அக்.11ம் தேதி மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.