வேலூர், ஏப்.16: மண்வளத்தை அதிகரிக்க கோடை காலத்தில் பசுந்தாள் உரப்பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் கோடை காலத்தில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்கு தேவையான இயற்கை உரங்களை எளிதில் அளிப்பதுடன், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். தற்போது தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு அல்லது பயறு வகைகளான காராமணி, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைத்து பூ பூக்கும் பருவம் வரை வளரவிட்டு அந்த நிலையிலேயே மண்ணில் ஈரம் இருக்கும்போது மடக்கி உழுதல் வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மண் வளம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து பயிர் சாகுபடியில் பல்வேறு நன்மைகளை விளைவிக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மடக்கி உழும்போது அவை மண்ணில் உள்ள கண்களுக்கு தெரியாத நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு ஹியூமஸ் எனப்படும் மக்குப் பொருள் மற்றும் இதர அங்கக பொருட்கள் தருகின்றது. இது மண்ணில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரித்து பயிர்களில் வளர்ச்சியில் இருந்து பாதுகாக்கிறது.கோடைக்காலங்களில் பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் மண் போர்வை போல் செயல்பட்டு மண்ணில் உள்ள நீர் ஆவியாதலை தடுக்கிறது.
பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து, மண்ணில் மடக்கி உழுவதால் அடுத்த சாகுபடி செய்யக்கூடிய பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதன் வாயிலாக ஒரு செலவை குறைக்கிறது. மேலும் பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மக்கச் செய்வதால் களை செடிகளின் விதை முளைப்புத்திறன் பாதிக்கிறது. எனவே விவசாயிகள் பல்வேறு நன்மைகள் தரக்கூடிய பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு அதிக விளைச்சலை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.