சமயபுரம், ஜன.20: மண்ணச்சநல்லூர் பகுதியில் பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடியை மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் (எ) பிரதீபன் (25). இவர் மண்ணச்சநல்லூர்,சமயபுரம்,திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பட்டா கத்தியுடன் வலம் வருவதும் வழிப்பறி செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் இவர் மீது கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் பிரதீபனை ஆஜர் படுத்தும்படி மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு சம்மன் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராம் உத்தவின்படி எஸ் ஐ கோபிநாத் தலைமயில் தனிப்படை போலீசார் ரவுடி பிரதீபனை தேடி வந்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி அருகே உள்ள சிவன் அவென்யூ பகுதியில் நேற்று பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பிரதீபனை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது பிரதீபன் பட்டாகத்தியை காட்டி போலீசாரை மிரட்டி அங்கிருந்து தப்பிக்க காம்பவுண்ட் சுவரில் ஏறி கீழே குதித்துள்ளார்.
அப்போது பிரதீபனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பட்டாக்கத்தியை கைப்பற்றி மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து. மேல் சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.