திருச்சி, ஜன.20: திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு வாடிவாசல் வழியாக மதுரையை சேர்ந்த புலிவளத்து ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. இக்காளையானது மாடுபிடி வீரர்களை தாண்டியபோது, தனது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கட்டளைமேடு வாய்க்காலில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதுக்குறித்து தகவலறிந்து வந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை வீரர்கள் படுகாயம் அடைந்த ஜல்லிக்கட்டு காளையை வாய்க்காலில் இருந்து மீட்டனர். பின்னர் சிறிது நேரத்திலே அந்த காளை உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு காளை இறந்த துக்கம் தாங்காமல் காளையின் உரிமையாளர் கதறி அழுதார்.