செய்யாறு, ஜன.21: செய்யாறு அருகே நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் மணப்பெண் மாயமானார். அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவரது திருமணம் நாளை 22ம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், செய்யாறு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண்ணை யாராவது கடத்திச்சென்றார்களா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.