Thursday, May 16, 2024
Home » மக்கள் குறைதீர் முகாமில் ரூ.83.14 லட்சம் மதிப்பில் நலஉதவி

மக்கள் குறைதீர் முகாமில் ரூ.83.14 லட்சம் மதிப்பில் நலஉதவி

by Suresh

புதுக்கோட்டை, செப்.5: புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.83.14லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலஉதவிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 407 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், போலியோ, மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 6 நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காலிப்பர் உதவி உபகரணங்களையும் மற்றும் தாட்கோ சார்பில், தூய்மை பணியாளர் நலவாரியத்தின் 10 பயனாளிகளுக்கு ரூ.81.99 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற வக்பு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உலமாக்களுக்கு, புதிய இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கு மானியமாக தலா ரூ.25,000 வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியத் தொகைக்கான காசோலைகளையும் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் 1330 திருக்குறளை முற்றோதல் செய்த, அறந்தாங்கி ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்ற கஜீவன் என்ற மாணவனுக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழையும், அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகைப் பெறும் 3 நபர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண சலுகை ஒப்பளிப்பு அரசாணையினையும் என மொத்தம் ரூ.83.14 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்றார். கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

18 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi