தஞ்சாவூர், ஏப்.4: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஸ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டு, உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணை, பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022ம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்கள், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மேலும், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை உபகரணங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), காந்தி (வளர்ச்சி), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ் நங்கை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப்கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சபீர்பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.