கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 221 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவிதிறன் குறைபாடு உள்ள 300 பேர், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 100 பேர் என 400 பேருக்கு, செல்போன்கள், பிரைலி கை கடிகாரம் மற்றும் 3 சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 435 பேருக்கு ₹50 லட்சத்து 92,450 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மேலும், 2,041 பயனாளிகளுக்கு ₹10.66 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் நிதி ஆதரவுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். கொரோனாவால் இறந்த ஊத்தங்கரை தாலுகா மூங்கிலேரி கிராம உதவியாளர் பழனி என்பவரின் மனைவிக்கு, ₹25 லட்சத்திற்கான காசோலை, பர்கூர் தாலுகா ஜெகதேவியை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்காக ஆணைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்….