ஈரோடு,பிப்.20: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 337 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும்,வீட்டுமனைப் பட்டா,கல்விக் கடன்,அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 337 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும்,முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பித்த பவானி,சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு உடனடி நடவடிக்கையாக காப்பீடு திட்ட அட்டையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.